ZTAMIL தமிழ் செய்திகள்

ஏ.டி.எம்.,மில் பணம் ரிசர்வ் வங்கி புது உத்தரவு

Written By Latest News on Thursday, 30 June 2011 | 19:04

ஏ.டி.எம்., மூலம் பணம் எடுக்கும் போது, பணம் வராமல் தொகை மட்டும் கணக்கில் கழிக்கப்பட்டால், அந்தத் தொகையை, புகார் கொடுத்த ஏழு நாட்களுக்குள் வங்கிகள் சம்பந்தப்பட்ட நபரின் கணக்கிற்கு மாற்றம் செய்ய வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அடுத்த வங்கி ஏ.டி.எம்.,மில் கையிருப்பு எவ்வளவு என பார்த்தாலும், அதுவும் இலவச பரிமாற்றத்தில் ஒன்றாகவே கருதப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு: வங்கி கணக்கு வைத்திருப்போர், தங்களின் வங்கி சார்ந்த ஏ.டி.எம்.,களில் மட்டுமல்லாது, பிற வங்கிகளின் ஏ.டி.எம்.,களிலும் பணம் எடுக்கலாம். அதாவது மாதத்திற்கு ஐந்து முறை மட்டுமே இப்படி பணம் எடுக்கலாம்.

அதற்கு மேல் பணம் எடுத்தால், ஒரு முறைக்கு 20 ரூபாய் என்ற வீதத்தில் கட்டணம் பிடித்தம் செய்யப்படும். அதே நேரத்தில், தங்களது வங்கி கணக்கில் எவ்வளவு இருப்பு உள்ளது என பார்த்தால், அதற்கு கட்டணம் எதுவும் கழிக்கப்பட மாட்டாது. மேலும், இலவசமாக அனுமதிக்கப்பட்ட ஐந்து பரிமாற்றங்கள் கணக்கிலும் இது வராது.

ஆனால், தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒருவர் தான் வைத்திருக்கும் வங்கி அல்லாது பிற வங்கியின் ஏ.டி.எம்.,யை மாதத்தில் ஐந்து முறை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும்.

கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என பார்த்தாலும், மினி ஸ்டேட்மென்ட் எடுத்தாலும் அது இலவச பரிமாற்றத்தில் கழிக்கப்பட்டு விடும்.

பணம் எடுப்பது, இருப்புத் தொகை எவ்வளவு என பார்ப்பது என, எந்த வகையில், அடுத்த வங்கி ஏ.டி.எம்.,யை பயன்படுத்தினாலும், அதற்கு ஐந்து முறை மட்டுமே இலவச அனுமதியுண்டு. அதற்கு மேல் பயன்படுத்தினால், 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். அதே நேரத்தில், பணம் எடுக்காமல் மற்ற வகையான நடவடிக்கைகளை அதாவது கையிருப்பு பார்ப்பது, மினி ஸ்டேட்மென்ட் எடுப்பது, பின் நம்பரை மாற்றுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால், அதற்கு ஒரு பரிமாற்றத்திற்கு ரூ.8.50 கட்டணம் வசூலிக்கப்படும்.

மேலும், இலவச பரிமாற்றங்கள், வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு மட்டுமே பொருந்தும். இந்த மாற்றங்கள் இன்று முதல், வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும். இது மட்டுமின்றி, அடுத்த வங்கி ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கும் போது, பணம் வராமல், தொகை மட்டும் கணக்கில் கழிக்கப்பட்டதால், அந்தத் தொகையை வாடிக்கையாளர் புகார் கொடுத்த 12 நாட்களுக்குள் அவரது கணக்கில் சம்பந்தப்பட்ட வங்கி வரவு வைக்க வேண்டும் என்பது தற்போதைய நடைமுறை.

அது மாற்றப்பட்டு, இனி புகார் கொடுத்த ஏழு நாட்களுக்கும் பணத்தை வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்க வேண்டும். பணத்தை வரவு வைக்க ஏழு நாட்களுக்கு மேல் ஆனால், வாடிக்கையாளருக்கு வங்கியானது 100 ரூபாய் செலுத்த வேண்டும். அதாவது, ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க முற்பட்டு, பணம் வராமல் போய், 30 நாட்களுக்குள் புகார் கொடுத்தால் மட்டுமே இந்த விதிமுறை அமலாகும்.

மேலும், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை ஏ.டி.எம்., மூலம் பணம் எடுக்கும் போதும், அவருக்கு எஸ்.எம்.எஸ்., மற்றும் இ-மெயில் மூலம் வங்கி செய்தி அனுப்ப வேண்டும். தற்போது குறிப்பிட்ட அளவு பெரிய தொகைக்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு மட்டுமே, இது போன்ற தகவல்கள் அனுப்பப்படுகின்றன. இனி, எந்த அளவு தொகை எடுத்தாலும் அனுப்பப்பட வேண்டும். இவ்வாறு ரிசர்வ் வங்கி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment